Ad Widget

வடக்கில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் – யாழ்.ஆயரிடம் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

வடக்கு மாகாண இளையோருக்கு வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்களும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னிடம் தெரிவித்தார் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், அதிவண, கலாநிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்று மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அதிவண, கலாநிதி, ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டனை இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகராக, பிரதிப் பொலிஸ் மா அதிபராக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.

இன்றைய தினம் இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் நேரில் ஆராய யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வந்து என்னையும் சந்தித்துள்ளார்.

பொலிஸார் பொதுமக்களுடன் கூடுதலாக பழகவேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்குதான் பொலிஸார். இராணுவத்தால் அது முடியாது. எனவே பொலிஸார் மக்களுடன் நல்ல உறவினைப் பேணவேண்டும்.

அது மாத்திரமல்லாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம்தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். தனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபருக்குச் சுட்டிக்காட்டினேன்.

“இளையோர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகின்றன.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது. ஏற்கனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றிவருகிறார்கள்.

மேலதிகமாக தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும்.

ஏனெனில் வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து பொலிஸ் சேவையில் இணைய விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப்படும்” என்று பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். என அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts