Ad Widget

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகளில் வர்ணப்பூச்சு வேலை செய்வதற்காக பளை பகுதியிலிருந்து சென்றிருந்த ஒருவர் மூலமே இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் தொற்று உறுதிசெய்யப்பட்ட இன்னொருவர் ஏற்கனவே தொற்று உறுதியானவருடன் தொடர்புடையவராவார்.

இதேவேளை, கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர், அங்கு சாரதிப் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவினில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இவர், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடையவராவார்.

மேலும், ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய ஊர்காவற்றுறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts