Ad Widget

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று: யாழில் ஆறு பேர்!

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில், உடுவிலில் தாய் மற்றும் 10 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம், நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வெள்ளவத்தையில் இயங்கும் யாழ் ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts