இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகரித்துள்ள போதைவஸ்து பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகள் குழுவுக்கும் வடக்கு மீனவசங்க தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்டுள்ள கேரளா கஞ்சா வகைகள் அதிகளவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மீனவர் சம்மேளனத்தின் தலைவர் நாகந்தி பொன்னம்பலம் இதன்போது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக யாழ். இளைஞர்கள் குறிப்பாக வேலையற்று இருக்கின்ற இளைஞர்கள் இலகுவில் இவை மூலம் ஈர்க்கப்பட்டு பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
வவுனியா மற்றும் வடக்கின் பல முக்கிய நகரங்களில் சாதாரண சில்லறை கடைகளில் கூட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், சிறுவர்கள் கூட அவ்வாறு போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டுமானால், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் கடற்படை அல்லது கடலோர காவல்படை இணைந்த கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று நாகந்தி பொன்னம்பலம் கூறியுள்ளார்.