நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை என்பவற்றிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வடக்கு தமிழ் மக்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர், அவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்கின்ற நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் தெற்கு மற்றும் வடக்கு மக்களிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என கோரியதுடன், வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கியுள்ளது என பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.