Ad Widget

வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படும்- டக்ளஸ்

வடக்கு மாகாணத்தில் பல்லேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச்செய்வதும், ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதுமே தமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அமர்வில் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து, ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

அந்தவகையில், எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது, இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

எமக்கு முந்திய ஆட்சிக்காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாது என்ற உத்தரவாத்தினையும் வழங்கியுள்ளேன்.

அடுத்ததாக, கடற்றொழில் அமைச்சின் மூலமாக குறிப்பாக, கரையோர மற்றும் அழ்கடல் கடற்றொழிலை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விரிவாக்கஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், நன்னீர் உள்ளிட்ட அனைத்து நீரியல் வளச்செய்கைகளை மேலும் பரவலாக்கி மேம்படுத்தும் ஏற்பாடுகளும் இத்துறையை மனைக் கைத்தொழிலாக முன்னெடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் கடற்றொழில் மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளச்செய்கை கைத்தொழில்கள் மூலமாக நாட்டு மக்களிடையே போசாக்கினை வளர்ப்பதும், இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது முக்கிய நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts