Ad Widget

வடக்கில் சலூன்களுக்கான சுகாதார நடைமுறை அறிவுறுத்தல்கள்!!

வடக்கு மாகாணத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நீண்டநாள்களளாக ஊரடங்கு மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு இருந்து தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கோரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை தங்களது சிகை அலங்கரிப்பு நிலையங்களில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அறிவுறுத்தல்கள்:

சிகை அலங்கரிப்பு நிலையங்களில் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
முடிதிருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

முடிதிருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய சேவையினை நிறைவு செய்தபின் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு கழுவிய பின்பே அடுத்த வாடிக்கையாளருக்குரிய சேவையை வழங்க வேண்டும்.

மொத்தமாக பணியில் உள்ள முடிதிருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடிதிருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடிவெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும்.

கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்றுநீக்கம் செய்யவும். தொற்றுநீக்கம் செய்யமுடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

போர்வை, துவாய் மற்றும் பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்த பின் அதனை உரிய முறையில் கழிவகற்றல் செய்யவும். துவாய்கள் மற்றும் போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்,
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
வடமாகாணம்.

Related Posts