Ad Widget

வடக்கில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது; மாந்தையில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது.

நேற்று மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட 443 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 29 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அந்த திருமண நிகழ்வில் மன்னார் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையோரும் பூநகரி வலைப்பாடு கிராமத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவ்வாறு திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மடு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், மற்றும் நோயாளி ஒருவருக்கும் என மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு மன்னாரில் உள்ள உறவினர்கள் வந்து திரும்பிய நிலையில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் நேற்று 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts