Ad Widget

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (வியாழக்கிழமை), 309 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர், யாழ்ப்பாணம்- ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியிலுள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்புடையவர். மற்றொருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவர். அவர் காத்தான்குடியிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று, 451 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய இருவர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் குழந்தையை பிரசவித்த தாயார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts