Ad Widget

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 719 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts