45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நாம் அபிவிருத்து தொடர்பில் பேசியுள்ளோம்.
வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐ.நா.வும் நான்கு இந்திய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
ஞாயிறு திவயின பத்திரிகையை வாசித்தேன். 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சர் உத்தரவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். அவர் உத்தரவிடவில்லை. இராணுவத் தளபதியிடம் வினவினேன். முகாம்கள் மூடப்படுவதில்லை என கூறினார். அவ்வறாயின் யார் மூடுவது? திவயினவின் ஆசிரியரா?” என பிரதமர் இதன்போது கேள்வி எழுப்பினார்.