Ad Widget

வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மாகாணத்தினுள், கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் சிறப்பு சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய கடலோரப் பாதுகாப்பினையும் கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைவார்களாயின் அல்லது உள்நுழைந்து மறைந்திருப்பார்களாயின் கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் உள்பட, எவராவது அருகில் உள்ள பொதுச் சுகாதார அதிகாரிகளிடத்திலோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் அண்மைய நாள்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அடையாளங்களை காணுமிடத்து உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்துவதே பொருத்தமானதாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும், பிசிஆர் பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே பொதுமக்கள் இயல்பான சந்தேகங்கள் ஏற்படுமிடத்து எவ்விதமான அச்சமும் அடையாது பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முடியும்.

இதைவிட, அனைத்து பொதுமக்களும் பொதுவெளியில் நடமாடுவதை இயன்றளவில் தவிர்ப்பதுடன், முகக்கவசம் அணிதல், கைசுத்திகரிப்பு திரவத்தினை பயன்படுத்தல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் ஆகிய மூன்று விடயங்களையும் பின்பற்றுதலும் அவசியமானதாகின்றது.

சமூகப் பொறுப்புடன் வடக்கு வாழ் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்வதுடன் மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொதுசுகாதரப் பணியாளர்கள் சிறப்புக் கவனம் கொண்டிருப்பதும் அவசியமாகின்றது. அதற்குரிய அறிவுத்தல்களையும் நான் வழங்கியுள்ளேன்.

மங்கல, அமங்கல நிகழ்வுகளின்போது வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகின்றது. அத்துடன் அத்தியாவசியப் பொருள்களுக்கு திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது முக்கியமான விடயமாகின்றது – என்றுள்ளது.

Related Posts