Ad Widget

வடக்கிற்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை!

வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை எனவும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற, யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது எனக்குறிப்பிட்ட அவர், இம்முறை வடகிழக்கு பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்கான பயிற்சி வடகிழக்கிலேயே நடைபெறவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பயிற்சிகளுக்கு அவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் குறிப்பிட்ட கணேசநாதன், மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். மாதாந்த ஊதியமாக 55000 ரூபாவினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிய கணேசநாதன், எமது மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரைவாக பொலிஸ் சேவையில் இணையுங்கள் என்ற கோரிக்கையினையும் விடுத்துள்ளார்.

sr_police001

Related Posts