வடகடல் நிறுவனத்தின் தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் திறைசேரியூடாக முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகடல் நிறுவனத்தின் கீழான குருநகர், லுணுவில, வீரவில ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன்வலைத் தொழிற்சாலைகளினது அரையாண்டு தொழிற்துறை மேம்பாடு தொடர்பில் மீளாய்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மூலப்பொருள், உற்பத்தி உற்பத்திகளின் சந்தை வாய்ப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் வடகடல் நிறுவனத்தின் கீழான குறித்த மீன்வலைத் தொழிற்சாலைகளின் தொழிற்துறை நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றும் வகையில் திறைசேரியூடாகவும், வங்கிகள் ஊடாகவும் நிதியினை பெற்று அந்நிதியின் ஊடாக குறித்த தொழிற்சாலைகளை முன்னேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், தேவைகளின் அடிப்படையில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர், இதுவிடயத்தில் குறித்த தொழிற்சாலைகளினது துறைசார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் பணியாளர்களும் தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இவ்வாறான ஒன்றிணைந்த செயற்பாடுகளின் ஊடாகவே குறித்த தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்த்தெடுக்க முடியுமென்றும் அதுசார்ந்து வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சின் பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்க, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், வடகடல் நிறுவனத்தின் தலைவர் திசவீரசிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.