Ad Widget

ரௌடிகளால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சாவு!! ; உடுவிலில் பதற்றம் – பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (வயது-25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

குடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ். வீதி, தொட்டி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் இடைமறித்தது. அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

குடும்பத்தலைவரின் தலையில் கொட்டானால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்த உத்தரவிடப்பட்டது.

“இரு தரப்புகளுக்கு இடையில் நீடித்த முரண்பாட்டில் இவர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக பொலிஸார் நின்றிருந்தனர். எனினும் தாக்குதலைத் தடுக்கவுமில்லை, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவுமில்லை.

சம்பவம் இடம்பெற்று ஒருவாரம் நிறைவடைந்த போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது குடும்பத்தலைவர் உயிரிழந்த பின்னர் அவரது வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாக அங்கு கூடியிருக்கும் உறவினர்களையும் ஊரவர்களையும் ஒன்றுகூடுவதைத் தடுக்கின்றனர்.

சுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினார்கள்.” என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் தாக்குதல் நடைபெற்ற தொட்டி ஆலடி எரிபொருள் நிலையப் பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

“மது அருந்தும் போது ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்து உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த குடும்பத்தலைவர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது. இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவேண்டும். அத்துடன், மோதல்கள் வெடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொள்ளவேண்டும்” என்று உடுவில் வட்டாரத்தில் இருந்து வலி. தெற்குப் பிரதேச சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர் தவராஜா துவாரகன், சுன்னாகம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts