Ad Widget

ரூ. 5,000 போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பாவனையின் போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த போலி நாணயத்தாள்களின் புழக்கம் தற்போது நாடு முழுவதிலும் பரவலாக இருந்து வருவதால், அவை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

கேகாலை பிரதேசத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 22 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அநுராதபுரம் – உலுக்குளம் பிரதேசத்திலிருந்தும் ஆயிரம் மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, இராகமை – பட்டுவத்தை பிரதேச வீடொன்றிலிருந்து 4 இலட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 53, ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 147 மற்றும் 500 ரூபாய் நாயணத்தாள்கள் 57 இருந்தன.

இவ்வாறாக, நாடு முழுவதிலும் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகமாகக் காணப்படுவதான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related Posts