ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை சிறுவனை விட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ காண்போர் நெஞ்சை கலங்கடிப்பதாக உள்ளது.
அந்த வீடியோவில் இரு நபர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னால் தீவிரவாதி ஒருவனும், அவன் அருகே, சிறுவன் ஒருவனும் நிற்கின்றனர்.
அந்த தீவிரவாதி, சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். திருக்குரானிலுள்ள வசனங்களையும் கூறுகிறான். அதன்பிறகு அவனது சைகையை ஏற்று, சிறுவன் தனது கையில் வைத்திருந்த ரிவால்வரால் கைகள் கட்டப்பட்ட இருவரின் தலையிலும் அடுத்தடுத்து சுட்டு கொலை செய்கிறான்.
ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று அந்த இருநபர்களையும் ஐஎஸ்ஐஎஸ் குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும் இதுவரை ரஷ்யா அதை ஒப்புக்கொள்ளவில்லை.
வீடியோவில் கொடூர கொலை செய்யும் சிறுவன் பெயர் கசாக். இவன், 150 பேர் கொண்ட தனது குடும்பத்தாருடன், கடந்த ஆண்டு சிரியாவுக்கு வந்து குடியேறியுள்ளான். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் இணைந்து கொலை செய்யும் வேலையில் இறங்கியுள்ளான் என்று தெரியவந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலகின் பல பகுதிகளில் இருந்தும் சிறுவர்களை அழைத்து வந்து, துப்பாக்கி பயிற்சி கொடுக்கின்றனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்கும் போது, சிறுவர்களை மனித கேடயங்களாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தற்கொலை படை தாக்குதலுக்காகவும் இந்த சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.