Ad Widget

ரவிராஜ் கொலை வழக்கு: சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரின் இரத்தமாதிரிகளை எடுத்து டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரான முனசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

ரவிராஜ் எம்.பி.யும் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜனட் லக்ஷ்மன் லொக்குவெலவும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் இருவரும் முனசிங்க ஆராச்சிகே நிலந்த சம்பத் முனசிங்க என்றழைக்கப்படும் நேவி சம்பத் என்பவருமே கைது செய்யப்பட்டனர்.

இந்த மூவரும் கொழும்பு நீதவான் நிரோஷ பெர்ணான்டோ முன்னிலையில் முகங்களை மூடிய நிலையிலேயே மார்ச் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினர், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அது கமெராவில் அன்று பதியப்பட்டது.

பிரதான சந்தேகநபரான சம்பத் முனசிங்க, மாணவர்களான ராஜீவ் நாகநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம் மற்றும் பிரதீப் ஆகியோரின் கடத்தலிலும் அவர்களை கொலை செய்ததிலும் சந்தேகநபர்களாக உள்ளார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதவான் நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மற்றும் பி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்பத் முனசிங்கவால் கடத்தப்பட்ட மாணவர்கள் ஒரு கடற்படை முகாமில் மறைத்து வைக்கப்பட்டு மாணவர்களின் பெற்றோரிடம் அவர் கப்பம் கோரினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான முனசிங்கவின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து தோட்டாக்கள், அறியப்படாத பலரின் ஆள் அடையாள அட்டைகள் மற்றும் அவர்களின் பல பொருட்களும் தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, பொலிஸ் மா அதிபருக்கு தாக்கல் செய்த முறைபாட்டில் தனது அதிகாரிகள் சிலர் ஆட்கடத்தலில் ஈடுபட்டனர் என கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணைகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடங்கினர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி தாக்கல் செய்த அறிக்கையின் படி முன்னாள் கடற்படை தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே சிலரை கொன்றதாக முனசிங்க தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் எம்.பி தனது இல்லத்திலிருந்து இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் 2006ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி, காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பு -8, எல்விட்டிகல மாவத்தை மாதா ரோட் சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் அன்றுகாலை 9.20 மணிக்கு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை தனியார் தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார்.

அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts