வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் 41 பேர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான யோகி, புதுவை, எழிலன் உட்பட 41 பேரும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தமைக்கான சாட்சிகள் இருப்பதாக தெரிவித்த கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இராண்டாம் வாசிப்பு மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இறுதிப் போரில் பலர் தமது குடும்பத்தினரால் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு ஒப்படைக்கப்ட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் உயிருடன் மீண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காணாமல் போனோர்களின் பெற்றோர், மனைவிமார் மற்றும் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
குறிப்பாக யோகரத்தினம் யோகி, புதுவை இரத்தினதுரை, பாப்பா, இளந்திரையன், எழிலன், மலவரன் உள்ளிட்ட 41 பேரும் அவர்களின் சிலரின் குடும்ப உறுப்பினர்களும், மனைவிமாரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் நேரடியாக சரணடைந்தார்கள். அதற்கான சாட்சிகள் உள்ளன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதிலளிப்பது யார்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.