Ad Widget

யுவதியை கடத்த முற்பட்டவர்களுக்கு பிணை

யாழ்ப்பாணம், கரவெட்டி, நவிண்டில் பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரை வானில் கடத்துவதற்கு முயற்சித்த இரண்டு சந்தேகநபர்களையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார்.

அத்துடன், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

கைதடி மற்றும் நாச்சிமார் கோவிலடி ஆகியவற்றை சேர்ந்த முறையே 20, 24 வயதுடைய இளைஞர்கள் மேற்படி யுவதியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பில் யுவதி சாவகச்சேரி நீதிமன்ற பதிவாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பதிவாளர் மேற்படி இரண்டு சந்தேகநபர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (11) மேற்படி யுவதி வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது, மேற்படி இரு சந்தேகநபர்களும் யுவதியை வானில் கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதிலிருந்து தப்பித்த யுவதி அலைபேசி மூலம் பதிவாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பதிவாளர், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் நெல்லியடி பொலிஸாரிற்கு கட்டளையிட்டார். இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் வானுடன் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். நீதவான் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினார்.

Related Posts