Ad Widget

யுத்தகாலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்! – சித்தார்த்தன்

யுத்த காலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததோடு நள்ளிரவிலும் கோவில் திருவிழாக்கள் முடிந்து வீடு திரும்பும் நிலை காணப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மரண தண்டனை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் இன்று சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும் குழுக்களாக இணைந்து வாள் வெட்டுகள் இடம்பெறுவதும் அதிகரித்துள்ளன.

வடக்கில் வித்தியா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அது இன்று தெற்கிலும் பரவி விட்டது. சேயா என்ற சிறுமி இதேபோன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வடக்கில் யுத்த காலத்தில் கூட பெண்கள் அச்சமின்றி நடமாடினார்கள்.

ஆனால் இன்று யுத்தமும் முடிந்து விட்டது. பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளன. இதற்கு மரணதண்டனை தீர்வாக அமையப் போவதில்லை. வடக்கில் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகின்றார். இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். நீதிபதி இளஞ்செழியனால் இதனை முன்னெடுக்க முடியுமானால் ஏன் ஏனையவர்களுக்கு முடியாது. வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொலிஸார் கடைமைகளை சரிவரச் செய்வதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.

அத்தோடு மொழிப் பிரச்சினையும் உள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்கள் பிழையான விடயங்களை எடுத்துக் கூறுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இன்று வாள் வெட்டுக்கள் நடத்தும் கோஷ்டிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் க.பொ.த.(சா.த) படித்து விட்டும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்களும் தொழிலில்லாமல் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் திரைப்படங்கள் பார்த்துவிட்டு வாள் வெட்டுக்களில் ஈடுபடுகின்றனர். எனவே மரணதண்டனை மூலம் நாட்டில் குற்றச் செயல்களை தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும் என்றார்.

Related Posts