நிரந்தர நியமனம் கோரி யாழ்.போதனா வைத்தியசாலை சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த 197 சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இன்று திங்கட்கிழமை முதல் தமது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் பணியாளர்கள் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு கடந்த சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களான நாங்கள் 197 பேரும் கடந்த 7 வருடங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த போதும், இந்த நேர்முகத் தேர்வில் தகைமை அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.
இதனாலேயே நாங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் அலுவலகத்திற்கு முன்பாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.
அதேவேளை, எமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தலைவர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.