யாழ். மேல் நீதிமன்றில் ரவிராஜின் சாட்சியம் பதிவு

2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கிய நடராஜா ரவிராஜ் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சுட்டிக்காட்டி மரணசான்றிதழை நீதிபதியிடம் அரச தரப்பு சட்டத்தரணி சமர்பித்திருந்தார்.

நடராஜா ரவிராஜ் உயிருடன் இருக்கும் போது, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறை விசாரணையின் போது வழங்கிய சாட்சியத்தினை நீதிமன்ற முதலியார் ஊடாக பதிவு செய்வதற்கு அரசதரப்பு சட்டத்தரணி அனுமதி கோரியிருந்தார்.

இதற்கு எதிர்த்தரப்பு சட்டத்தரணி தனது ஆட்சேபணையினை தெரிவித்திருந்தார்.

எதிர்த்தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிபதி மா.இளஞ்செழியன் ரவிராஜ்;ஜின் சாட்சியத்தினை, பதிவு செய்ய அனுமதி வழங்கினார்.

ஊர்காவற்துறை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தப்பட்டிருந்த ரவிராஜின் சாட்சியத்தினை முதலியார் வாசித்து காட்டியதை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சாட்சியத்தினை பதிவு செய்தார்.

Related Posts