இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.