Ad Widget

யாழ். மக்களிடையே விழிப்புணர்வற்ற தன்மையே சிறுமியர் மீதான துஸ்பிரயோகத்திற்கு காரணம்: எஸ்.சிவரூபன்

யாழ்.மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு அருகி வருகின்றமையால் சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.2010ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 110 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 182ஆக அதிகரித்திருக்கின்றது. இவ்வாண்டு 2 மாதங்களே நிறைவடைந்திருக்கின்ற நிலையில் 24 துஸ்பிரயோகச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவை சிறுமியர் மீதனா வன்முறைகள் அதிகரித்திருப்பதையே காண்பிக்கின்றது. இதற்கு சிவில் நிர்வாகக் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படாமையும், மக்களிடம் விழிப்புணர்வற்ற தன்மையுமே காரணம் என சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகளும் குறைவாகவே வழங்கப்படுகின்றது. மேலும் குற்றமிழைத்தவர்களை காப்பாற்ற சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முன்வருவதில்லை.

எனவே இது தொடர்பாக விழிப்புணர்வும், துஸ்பிரயோகங்கள் தொடர்பான தண்டனைச் சட்டங்களையும் இறுக்கமாக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts