Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(03.01.2023) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தனது தாயாரை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான பெண் அனுமதித்திருந்தார்.

இதன்போது அவர் எடுத்துவந்த உணவை தாயாருக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகமான முறையில் நடந்து நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண், தான் தாயாரை விடுதியில் நின்று கவனித்து வருவதாகவும் உணவு வழங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை கண்டுகொள்ளாத குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை வெளியேற்றியதுடன் அருகில் இருந்த விடுதிக்கு சென்று வேறொரு ஆணொருவருடன் முரண்பட்டு அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நோயாளிகளுடனும் பார்வையாளர்களுடனும் அநாகரீகமான முறையில் நடந்ததால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் இவர் தொடர்ந்தும் இவ்வாறே செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இவர் வைத்தியர் ஒருவரது உறவினர் என்பதால் ஏனையோர் பேசுவதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னரும் பார்வையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts