ஐ.நாவின் குற்றம் மற்றும் போதைப்பொருள் அலுவலகத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரிகள் பிலிப் டைவேட் குழு ஒன்று இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ளதுடன் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து சென்றுள்ளனர்.
இன்று காலை ஐ.நாவின் திட்டமிடல் அதிகாரிகள் குழு யாழ். போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் பிரதிப்பணிப்பாளர் பவானந்தராஜாவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
சந்திப்பு குறித்து பிரதிப்பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கைளில்,
வைத்தியசாலையினைப் பார்வையிட்டதுடன் தற்போதைய சேவைகள் மற்றும் முன்னைய சேவைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.அத்துடன் தற்போதுள்ள முன்னேற்றங்கள் , குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
அதற்கமைய எம்.ஆர்.ஐ ஸ்கானர் வைத்தியசாலைக்கு அவசியம் என்று சுட்டிக்காட்டியிருந்தோம். பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் கட்டட வசதிகள் போதுமானதாக உள்ளதா என்றும் கேட்டனர். அதற்கமைய கட்டட தேவைகள் உள்ளதாகவும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றனவற்றின் தேவை குறித்தும் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் தெரிவித்திருந்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.