Ad Widget

யாழ். பொக்கணை மயானக் காணியை படையினருக்கு வழக்க முடியாதென வலி. கிழக்கு பிரதேச சபை தீர்மானம்

யாழ். ஊரெழு பொக்கணை மயானத்திற்குரிய நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென, வலி. கிழக்கு பிரதேச சபை திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், பிரதேச சபையின் எல்லைக்குள் படையினருக்கு நிலம் வழங்க கூடாதென தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.மேற்படி மயானத்திற்குரிய 130 ஏக்கர் பரப்பு நிலத்தினை தமது படைமுகாம் அமைப்புக்கென வழங்குமாறு இராணுவத்தினர், பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த இடம் பிரதேச சபைக்குச் சொந்தமானது என்ற வகையில் பிரதேச சபையிடம் கோரிக்கை விடப்பட்டது.

எனினும், இந்த கோரிக்கைக்கு உடனடியாகவும், வெளிப்படையாகவும் மறுப்புத் தெரிவித்துள்ள பிரதேச சபை, எக்காரணத்தைக் கொண்டும் மயானத்திற்குரிய நிலம் இராணுவத்திற்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளதுடன், அதிகளவான மக்களால் அந்த மயானம் தற்போதும் பாவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனோடு தமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் நிலம், முடிக்குரிய நிலம், சபைக்குரிய நிலம் என எந்த வகை நிலத்தையும் எந்தக்காரணத்திற்காகவும் படையினருக்கு வழங்க கூடாதென சபையில் தீர்மானமொன்றையும் ஏக மனதாக நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts