Ad Widget

யாழ் நகர அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்

உலக வங்கியினால் 55 மில்லியன் அமெரிக்க டொலரில் யாழ் நகரை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நகர அபிவிருத்தி திணைக்களத்தினால், அரச மற்றும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

பின்னர், யாழ். நகரப் பகுதியின் முக்கிய இடங்களை அபிவிருத்தி செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கான குழு ஒன்றும் ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில், யாழ். நகரப் பகுதியில் முக்கிய இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், விசேட விதமான தேவைகளும் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பிரதிநிதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் பத்திநாதன், யாழ். மாநகர ஆணையாளர் பா.வாகீசன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இத் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts