யாழ். நகரில் பெருகியுள்ள கட்டாக்காலி நாய்களை பிடித்து அகற்றுவதில் யாழ். மாநகரசபை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வர்த்தகர்களினாலும் பொதுமக்களினாலும் மாநகரசபைக்கும் குறிப்பாக முதல்வருக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து அவரது பணிப்புரைக்கமைய மேற்படி நடவடிக்கையானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாய்காலி நாய் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் இன்றையதினம் அதிகாலை முதலே தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். யாழ்.நகர மத்தியிலுள்ள ஆஸ்பத்திரி வீதி பருத்தித்துறை வீதி ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நாய்க்கூண்டு வண்டிகளுடன் சென்ற பணியாளர்கள் குறுகிய நேரத்திலேயே பெருமளவு நாய்களைப் பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
பெரும்பாலும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் குறைவாகவே உள்ள மேற்படி பகுதிகளில் பெருமளவு நாய்கள் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை ஒருசில குடியிருப்பாளர்கள் நாய்பிடி தகவலறிந்ததும் தத்தமது வளர்ப்பு நாய்களை பாதுகாப்பதிலும் வீட்டினுள் கட்டி வைப்பதில் அவசரம் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.