Ad Widget

யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துகொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது:

கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக அந்தப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் கஜனது முறைப்பாட்டை பொருட்படுத்தாது, மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர் – என்றனர்.

இதுதொடர்பில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரின் பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுவரை கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts