Ad Widget

யாழ் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த விடயத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

வைத்தியசாலை பணிக்குழாமினரால் ஏதேனும் தவறுகள் ஏற்படுமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

4 நாட்களுக்கு மேலாக நிலவிய காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் – மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்ததை அடுத்து அவர் கடந்த 25 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமிக்கு, உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கெணுலா பொருத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கெணுலா பொருத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து கடந்த 2 ஆம் திகதி வைத்தியர்கள் அவரது இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டித்திருந்தனர்.

இச் சம்பவமானது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடமாகாண ஆளுநர், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரிடம் சிறுமியின் பெற்றோர் இது குறித்து முறைப்பாடளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பல கோணங்களிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts