யாழ்ப்பாணம்- கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் போக்குவரத்து அனுமதி உறுதிப்பாடு குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கொழும்புக்கு செல்ல தயாரான பயணிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகினர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தனியார் பஸ்கள் யாழ்ப்பாணம் – குருநாகல் – கொழும்பு பாதையிலும், யாழ்ப்பாணம் – புத்தளம் – சிலாபம் – கொழும்பு பாதையிலும் நாளாந்தம் சேவேயில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது பளை வரை ரயில் சேவை நீடிக்கப்பட்ட நிலையில், தனியார் பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இடையே முரண்பாடுகள் வளரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ்களுக்கான வழிப்பாதை அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள், வழிப்பாதை அனுமதிப்பதிரம் அற்றவர்கள் பஸ்சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறித்து ஆட்சேபம் தெரிவித்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறிப்பாக வழியனுமதிப்பத்திரமின்றி பஸ் சேவை நடத்தபவர்களுக்கு எதிராகவே இந்தப் பேராட்டம் நடத்தப்பட்டதாயினும் முன்னறிவிப்பின்மை காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது நேரத்தின் பின்னர் வழமைபோல் பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.