Ad Widget

யாழ். குடாநாட்டு வாகனங்கள் மீது எந்நேரத்திலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும்

யாழ். மாவட்டத்தில் வாகனங்கள் மீது எந்த நேரத்திலும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்று யாழ். மாவட்ட உதவி போக்குவரத்து ஆணையாளர் கே.மதிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களை கடுமையாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

முதற்கட்டமாக பொலிஸாருடன் இணைந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அழகு சாதனப் பொருள்களை அகற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. சாரதிகள் இவற்றின் மீதான கவனம் காரணமாக வீதிகளில் கவனம் செலுத்துவதில்லை.

இதேபோல முச்சக்கர வண்டிகளில் தேவைக்கு அதிகமான அலங்காரங்கள், கண்ணாடிகள் பொருத்தப்பட்டு பின்னால் ஒலி பெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டு காணப்படுகின்றன. இவையும் கவனக்குறைவையே ஏற்படுத்தும். இத்தகைய தேவையற்ற பொருள்கள் அகற்றப்படும். இல்லையென்றால் பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.

இதேபோல வீதியில் ஒடும் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதற்க்கு தகுதி உடையதா என பரிசோதனை செய்யபடும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் கருத்தரங்குகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழகைளிலும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட போக்குவரத்து திணைக்கள சாரதி அனுமதிப்பத்திர பரிசோதகர்களான கே.அதிகாரி, சி.எல்.லக்மல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Related Posts