Ad Widget

யாழ் குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு: 29 பேர் கைது!

யாழ், குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, திடீர் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஏழு வாள்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, வடக்கில் 53 பொலிஸ் நிலையங்கள் உள்ள போதிலும், 4 பொலிஸ் நிலையப் பகுதிகளில் மாத்திரமே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே, வன்முறைக் குழுவினரின் மறைவிடங்களில் இவ்வாறு சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களிடம் எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது, மாறாக சில போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்காக, சில பிரதேச அரசியல்வாதிகள், வணிகர்களே இவர்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.” என கூறினார்.

யாழ்ப்பாணத்தில், அண்மைக்காலமாக ஆயுதக்குழுக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பொலிஸார், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 29 பேரை தற்போது கைது செய்துள்ளனர். அதேநேரம், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts