யாழ்ப்பாணம் விமான நிலையம் செயற்படத் தொடங்கி ஒருமாத காலப்பகுதியில் 857 பேர் அதனூடாகப் பயனம் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்துள்ளதுடன் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் 385 பேர் வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் பயணிகள் விமான சேவையினை சென்னைக்கு ஆரம்பித்தது. இதன்படி திங்கள், புதன் , வெள்ளி ஆகிய நாட்களில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் சேவையை நடத்தி வருகின்றது. ஒருமாத காலப்பகுதியில் 857 பேர் பயணித்துள்ளனர்.
எனினும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடான பயணத்துக்கு அதிக வரி அறவிடப்படுதன் காரணமாக யாழ்ப்பாணம் -சென்னை விமான சேவைக்கு பயணச்சீட்டின் விலை உயர்வாகவே உள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ஆட்சிமாற்றத்தின் காரணமாக 2 கட்டமான மேலதிக கட்டுமான பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பதிவியேற்ற பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாணம் விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியா 300 மில்லியனை வழங்கவுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.