Ad Widget

யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வில்லை- ஏனைய மாவட்டங்களில் நாளை தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, மார்ச் 30 திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது- என்றுள்ளது.

Related Posts