Ad Widget

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர் இந்தியாவில் கைது!

arrest_1தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இந்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் நைரோபிக்கு பயணமாகவிருந்த வேளையிலேயே மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மின் பொறியியலாளரான இவர், இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியம் கரையை மே மாதம் 9ஆம் திகதி அடைந்தார்.

இலங்கை அரசாங்கம் இவருக்கு எதிராக இன்ரபோல் அறிவித்தல் விடுவித்திருந்தமையால் இவர் மும்பாய் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இவர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்ட பின் மறைந்து வாழ்ந்துவந்தார். இவரை இலங்கை அதிகாரிகள் 2009ஆம் ஆண்டு கைதுசெய்து சித்திரைவதை செய்துவந்தனர். இலங்கை பொலிஸார் இவரை தேடி வந்தனர். இதனால் இவர் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் 2001 – 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கல்லூரி ஒன்றில் படித்து மின் பொறியியலில் பட்டம் பெற்றவர். இவரை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஆணையாளர் ஹிமன்ஷு றோய் கூறியுள்ளார்.

Related Posts