Ad Widget

யாழ்ப்பாணத்தில் சந்திப்புகள், நிகழ்வுகளில் பங்கேற்கிறார் சமந்தா பவர்!

இலங்கை வரவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

புதுடில்லி செல்லும் அவர், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நடக்கும் பெண்கள் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ள அவர், அன்று பிற்பகல், உலக விவகாரங்களுக்கான இந்திய சபையில், ஐ.நா. அமைதி காப்புப்படை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் சமந்தா பவர் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்வார். இலங்கையில் அவர், இருதரப்பு கூட்டை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பையும், உள்நாட்டுப் போருக்குப் பின்னர், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நிலையான அமைதியை ஏற்படுத்தும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்துவார்.

கொழும்பில் அவர், மூத்த அரச அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூக குழுக்கள், மற்றும் இளைஞர்களைச் சந்தித்துப் பேசுவார்.

யாழ்ப்பாணம் செல்லும் சமந்தா பவர், அங்கு உள்ளூர் அரச அதிகாரிகள், மற்றும் மோதல்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அமைப்புகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். உள்ளூர் ஊடகவியலாளர்களையும் சந்திக்கும் அவர், போரின்போது இலக்குவைக்கப்பட்ட நாளிதழ் பணியகத்திற்கும் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய பிரிவு தொடங்க நிகழ்வில் பங்கேற்கும் சமந்தா பவர், போரின்போது சேதமாக்கப்பட்ட யாழ்.பொது நூலகத்துக்கும் செல்லவுள்ளார்.

பொது நூலகத்துக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, புராதன உள்ளூர் கையெழுத்துச் சுவடிகளை மீளமைப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவையும் அறிவிக்கவுள்ளார் – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts