Ad Widget

யாழில் 25 பேருக்கு டெங்கு

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை சுகாதார வைத்தியதிகாரி நேற்று புதன்கிழமை(24) தெரிவித்தார்.

பாசையூர், நாவாந்துறை போன்ற பகுதிகளில் கூடுதலான டெங்குநோய் தொற்று உள்ளானவர்கள் காணப்பட்டதாகவும், உடனடியாக அப்பகுதிக்கு தமது குழுவினர் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகளையும் உதவிகளையும் செய்திருந்ததாக அவர் கூறினார்.

நோய்த்தாக்கம் இனங்காணப்பட்ட பகுதிகளில் நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இராணுவத்தினருடைய உதவியுடன் துப்பரவாக்கும் பணிகளையும் மாநகர சபை ஊழியாளர்கள் மேற்கொண்டதாகவும் கூறினார்.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேடவிதமான நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts