Ad Widget

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள் மூவரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்கூடத்தில் 248 பேருக்கு நேற்றையதினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

Related Posts