தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில்
இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் தனது இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைத் இராணுவத் தேவைகளுக்காகவும் சிங்களவர்களை குடியேற்றி தமிழ் மக்களின் குடிப்பரம்பலைக் குலைத்துவிடவும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி வேலை செய்து வருகின்றது.
இதனால் வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களிலும் இந்தியாவிலும் அகதி முகாம்களில் அகதிகளாக எம் மக்கள் சீரழிகிறார்கள்.
அந்த மக்கள் வாழ்வாதார மற்றவர்களாக விவசாயம் செய்ய முடியாதவர்களாக சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாதவர்களாக குடியிருப்புக்கள் அற்றவர்களாக 25 ஆண்டுகளாக அடக்குமுறைக்கும் ஒடுக்கமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசின் தமிழின அழிப்பின் ஒரு அம்சமாகவே இந் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
இவற்றிற்கு எதிராகத் தென்னிலங்கை இயக்கங்களும் மக்களும் எம்மினத்தின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட முன்வந்தமையை நாம் வரவேற்கின்றோம்.
எதிர்வரும் 15.07.2014ல் யாழ். நகரில் மு.ப.10 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஜனநாயகப் போராட்டத்தில் நாமெல்லாம் பங்குகொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.