யாழ். பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஈ.எம்.யூ. விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான இடத்துக்கே விஜித குணரத்ன இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றி வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைவாக , பொலிஸ் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றங்கள், சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரதான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்புடன் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் குணரத்ன யாழுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அட்டன் பகுதியில் தமிழ் பேசும் மக்களுடன் இணைந்து சேவையாற்றிய அனுபவமும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சியும் உள்ள அதிகாரியாக கருதப்படும் விஜித்த குணரத்ன, சினேகபூர்வ சேவையை முன்னெடுப்பது தொடர்பில் யாழுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜித குணரத்னவுடன் சேர்த்து சேவை அவசியம் கருதி மேலும்
5 உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நிக்கவரட்டி உதவி பொலிஸ் அத்தியட்சர் அனுர தெல்கஹபிட்டிய பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கும், புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.கே.எஸ். டி சில்வா ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதனைவிட மொனராகலை உதவி பொலிஸ் அத்தியட்சர் கிளமன்ட் பெர்னாண்டோ பாணந்துறைக்கும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் அமரதுங்க மொனராகலைக்கும் இடமாற் றப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய பியசேகர நுகேகொடை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சராக இடமாற்றப்பட்டுள்ளார்.