யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சங்கானை, சித்தங்கேணி வட்டுக்கோட்டை உட்பட மேலும் சில பகுதிகளில் கடந்த முதலாம் திகதி முதல் குடும்ப உறுப்பினர்களின் விபரம், அடிப்படைவசதிகள் உள்ளிட்ட 42 வினாக்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு இராணுவத்தால் விபரங்கள் சேகரிப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கருத்து ெவளியிடுகையில், யுத்தகாலத்தின் பின்னர் வடமாகாணத்தின் பல பிரதேசங்களிலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகவே அவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கு குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள் தேவையாக உள்ளது.
அத்துடன் இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நலன்புரிச் சேவைகள், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் ஆகியவற்றை வழங்குவதற்காகவுமே அவ்வாறு விண்ணப்பங்கள் கடந்த வாரத்தின் முற்பகுதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான தகவல்கள் இராணுவத்தினரின் சேவைகளை முன்னெடுப்பதற்காகவே தவிர பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. பொதுமக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் விடயங்களை யாரும் தவறாக பிரசாரப்படுத்தக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.