Ad Widget

யாழில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் சுமூகமாக தீர்ந்தது

கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்.மாநகர சபை மஞ்சள் கோட்டுக்கு வெளியே அழகுமாடப் பொருட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று சட்டம் ஒன்றினை விதித்திருந்தது.

நேற்றைய தினம் ஒரு அழகு மாடக்கடையின் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் மஞ்சள் கோட்டிற்கு வெளியே அவை வைக்கப்பட்டிருந்தது. இதனால் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் எந்தவித முன்னறிவித்தலுமின்றி அத்துமீறி வந்த குறித்த கடையை சீல் வைத்தனர்.

நேற்றைய தினம் குறித்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படாததால் இன்றைய தினம் அழகுமாடக்கடை உரிமையாளர்கள் இணைந்து சீல் வைத்த கடையை திறக்குமாறு வலியுறுத்தி கடைகள் அனைத்தையும் பூட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.

மேலும் குறித்த இடத்திற்கு விரைந்து வந்த வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் யாழ்.மாநகர சபை ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த வேளை யாழ்.மாநகர சபை ஊழியர் ஒருவர் ஜெயசேகரத்தை தாக்க முற்பட்டார்.அதனால் குறித்த பகுதியில் பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணப் பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததையடுத்து சீல் வைத்த கடை திறக்கும் படி அழகுமாடக்கடை உரிமையாளர்கள் கோசங்கள் எழுப்பினர்.

எனினும் குறித்த இடத்திற்கு வருகை தந்த வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சீல் வைத்த கடையை மீண்டும் திறக்கும் படி யாழ்.மாநகர சபை ஊழியர்களுக்கு பணித்தார்.

அவரது பணிப்பின் பேரில் சீல் வைக்கப்பட்ட கடை மீண்டும் திறக்கப்பட்டதுடன் இரு தரப்பினருடனும் அவைத்தலைவர் பேசி பிரச்சினையை சுமூகமான நிலைக்கு கொண்டு வந்தார்.

பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts