யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களினால் 75 தினங்களில் 48 பேர் மரணமடைந்துள்ளதுடன் 4ஆயிரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளி விபரங்களின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பான பாதிப்பு விபரம் வெளிவந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்குள்ளாகி 6 ஆயிரத்து 300 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவு நிலையிலும் உள்ள 4 ஆயிரத்து 850 பேர் எலும்பு முறிவுக்கு உள்ளாகிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் குறித்த 75 நாள் காலப் பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டு காபெட் வீதிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதும் வாகனங்களின் தொகை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதோடு வாகனச் சாரதிகள்வேகமாக வாகனங்களைச் செலுத்துவதுமே விபத்துக்களுக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட வீதிகளில் வீதிப் போக்குவரத்தைக் கண்காணித்து வரும் பொலிஸார் வாகனப் போக்குவரத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்து சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்குகின்றனர்.
ஆனால் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளோ அதிகரித்த வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவோர் மீது சட்ட நடவடிக்கையோ மேற்கொள்ளுவது இல்லை.வாகனம் செலுத்தும் வேகத்தைக் கட்டுப் படுத்தும் வரையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.