Ad Widget

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தின்போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts