Ad Widget

யாழிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை!! அலையன்ஸ் எயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை- யாழ்ப்பாணம் இடையே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் இடம்பெறுமென அலையன்ஸ் எயர் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது.

அதன்பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்குப் பயணிக்கும் 9, 101 இலக்க விமானம் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்

அதேபோல பிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் 9,102 இலக்க விமானம், பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை சென்றடையும் என்றும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணக் கட்டணம் தொடர்பான அறிவிப்பையும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாயும் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள் கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழா கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் வழக்கமான சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சில நடைமுறைச் சிக்கல்களை தீர்க்க வேண்டியிருந்ததால், சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எயர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts