Ad Widget

மோதலுக்கு தயாரான வாள் வெட்டு குழுவினர் பிடிபட்டனர் – ஆயுதங்களும் சிக்கின!

தென்மராட்சியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ஐ’ குழு எனவும் ‘சவா’ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த குழுவினர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள், இரும்பு கம்பிகள், பொல்லுகளுடன் சிறிய ரக வான் ஒன்றில் சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது, பொலிசாரை கண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளது.

அது குறித்து பளை பொலிசாருக்கு, கொடிகாமம் பொலிசார் அறிவித்தை அடுத்து, பளை பொலிசார், மருதங்கேணியிலுள்ள காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிசார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்ததுடன், 13 இளைஞர்களை கைது செய்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடமிருந்த வாள்கள், இரும்பு கம்பிகள், பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யபட்டுள்ள 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிசார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts