ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஏற்கனவே 3 தடவைகளுக்கு மேல் அவரைக் கொலைசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அக்கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தபோதிலும் எதிர்காலத்திலும் ஜனாதிபதியை கொல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த மைத்திரிபாலவுக்கு எதிராக ஜனவரி 9 ஆம் திகதியே சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் நான் ஏற்கனவே ஜே.வி.பியை வலியுறுத்தியிருந்தேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ஜே.வி.பி. எப்போதும் செயற்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக இவ்வாறான ஒரு நடவடிக்கை இடம்பெற்றமை அறிந்திருந்தும் இதற்கு எதிராக எவரும் குரல் கொடுக்காமை ஆச்சரியமாகவும் கவலையாகவும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வின்போதும் அவரைக் கொல்வதற்கான சூழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்தோம்.
அண்மையில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த கூட்டமொன்றில் ஆயுதத்துடன் இராணுவ அதிகாரி ஒருவர் நடமாடியிருந்தார். இவை அனைத்தும் ஏதே ஒரு சக்தியினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்” – என்றார்.